ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி ரஷ்யாவின் அசுர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கோவாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானம், குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து 236 பயணிகளும், 8 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சோதனை நடைபெற்றது. விமானப்படை தளம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயணிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே, டெல்லியிலிருந்து புவனேஷ்வரத்தை நோக்கி ஏர் விஸ்தாரா நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் புறப்பட்டது. ஆனால், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு, பத்திரமாக தரையிறங்கியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.