சட்டமன்றம் ஆளுநர் உரையுடன் நேற்று முன் தினம் கூடியது. உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்த நிலையில்,
அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர். இதனால் அவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். அந்த சமயத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
2ஆம் நாளான நேற்று மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் வந்தனர். ஆளும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆளுநருக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்துள்ளனர்.
அதுபோலவே ஓபிஎஸ் இருக்கை விவகாரம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்து முடிவு எடுக்காதது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.