Monday, May 13, 2024
Homeஅரசியல்செய்திசனாதன தர்மத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு -ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு -ஆளுநர் ஆர்.என்.ரவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தியாகராஜர் சமாதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தார்.

தியாகராஜர் ஆராதனை 175 ஆண்டுகளாக நடைபெறும் நிலையில் இதுவரை விஐபிக்கு என்று தனியாக மேடை அமைத்தது இல்லை. நடப்பு ஆண்டுதான் முதல்முறையாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பங்கேற்பதும் இதுவே முதல் முறை. பொதுவாக தமிழ்நாட்டில் நடக்கும் விழாக்களில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், விழாவின் முடிவில் தேசிய கீதம் பாடுவதும் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, தற்போதைய விழாவில், முதலில் தேசிய கீதமும், அதற்கடுத்து தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார். இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது. இசையே சக்திமிக்க பக்தியாக இருக்கிறது” என்றார்.

இந்தியா முழுவதும் ராமரை விரும்புகின்றனர் என்று குறிப்பிட்ட ஆளுநர், திருவையாறு புண்ணிய தீர்த்தமாக விளங்குவதாகவும், இந்தியாவை உருவாக்கிய ரிஷிகளில் ஒருவர் தியாகராஜர் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளில் இந்தியாவை உலக நாடுகள் மூன்றாம் தர நாடாக பார்த்த நிலையில், தற்போது இந்தியாவை முன்னணி நாடாக வியந்து பார்க்கின்றனர்.

உலகத்தின் விஸ்வகுருவாக இந்தியா விளங்குகிறது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது தெற்கிலிருந்து தான் துவங்கியது. அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது என்று குறிப்பிட்டார்.

மேலும், உலகத்தின் கலங்கரை விளக்காக இந்தியா விளங்குவதாகவும், நாம் பொருளாதாரத்திலும், ராணுவத்திலும், ஆன்மீகத்திலும் வலிமை மிக்கவராக உள்ளோம் என்றும் கூறிய ஆளுநர், விவேகானந்தர் கூறியபடி, நமது தசைகள் இரும்பாக இருக்கட்டும்; இதயம் வேதாந்தியாக இருக்கட்டும். இந்தியா ஒளிர்கிறது. வாழ்க பாரதம்; ஜெய்ஹிந்த் என்று கூறி உரையை முடித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments