ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டில் தொடங்குகிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள், அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகின்றன.
வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 1, 525 வீராங்கனைகள் பதிவுசெய்த நிலையில் இறுதிப் பட்டியலில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இன்று மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 5 அணிகளும் சேர்த்து 90 வீராங்கனைகளை தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு அணியும் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 வீராங்கனைகள் வரை தேர்வுசெய்து கொள்ள முடியும்.
இந்த ஏலத்தைப் பொருத்தவரை ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஆஸ்லி கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, மெக் லேன்னிங், அலிஸா ஆகியோரை தேர்வுசெய்ய அணி நிர்வாகங்கள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். மேலும், ஜியோ சினிமா செயலி, இணையதளம் ஆகியவற்றிலும் நேரலை செய்யப்பட உள்ளது.