முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், ஓபிஎஸ்-சின் அரசியல் எதிர்காலம் பூஜ்யம் தான் எனக் கூறுகிறது ஈபிஎஸ் தரப்பு. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்கிறது ஓபிஎஸ் அணி.
மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என கூறுகிறார் ஓபிஎஸ்ஸின் வழக்கறிஞர் திருக்குமரன். ஆனால், சீராய்வு மனுத்தாக்கல் செய்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பே மீண்டும் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். அரசியல் ரீதியாக தனது பலத்தை வெகுவாக இழந்து விட்ட ஓபிஎஸ், ஆதரவாளர்களுடன் இணைந்து, சசிகலா துணையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கள அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏறக்குறைய தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ், முதலில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் என கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் போல, கூண்டோடு நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் அணிக்குத் தாவினால், ஓபிஎஸ் நிலை மேலும் கேள்விக்குறியாகக்கூடும்.