இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்தாண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதாரா நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தனர்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார்.
நெருக்கடியை சந்தித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டில் மட்டும் சுமார் 32 ஆயிரத்து 800 நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. எரிபொருள் தேவை, அந்நிய செலாவணி கையிருப்பு, அத்தியாவசிய தேவைகள் என பலவற்றுக்கும் இந்த நிதியுதவியை இந்தியா பிரித்து வழங்கியுள்ளது.
இந்நிலையில், ‘அண்டை நாட்டிற்கு முதல் உரிமை’ என்ற கொள்கையின்படி இந்திய அரசு இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கி உதவியுள்ளது. அந்நாட்டின் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா இந்த உதவியை செய்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதர் இந்த பேருந்துகளை ஒப்படைத்தார்.