கொரோனா பரவலின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் அதன் பாதிப்பு இன்னும் ஓயாமல் துரத்தி வருகிறது. அந்நாட்டின் பெய்ஜிப், ஷாங்காய் உள்ளிட்ட முன்னணி நகரங்களில் பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
சீனாவில் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் சீனாவில் உயரிய கல்வி நிறுவனமாகக் கருதப்படும் சீனா இன்ஜினியரிங் அகாடமியைச் சேர்ந்த 20 முன்னணி பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மரணடைந்துள்ளனர்.
அந்நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த அகாடமிதான் அந்நாட்டின் முன்னணி திட்டங்களை உருவாக்கியுள்ளது.
எனவே, இந்த அகாடமியை சேர்ந்தவர்கள் சீனாவின் முக்கிய புள்ளிகளாக பார்க்கப்படுவார்கள். இதில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதிக்குள் மட்டும் 20 பேர் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீன அரசும் முறையான தகவல்களை வெளியிடவில்லை.