உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக பெருமளவு மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளுவதற்கே அரசாங்கம் முயல்கிறது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
மின் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதனால் பல தொழில்சாலைகள் மூடப்படும்.
பொருளாதாரம் மேலும் பின்னடைவைச் சந்திக்கும். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் படுதோல்வியைச் சந்திக்கும். நிலையான அரசாங்கம் இருந்தால் மாத்திரமே இந்த பொருளாதார பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாடுகள் கூறுகின்றன.
அந்த நிலையான ஆட்சி அமைவதற்கு தேர்தல் அவசியம். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் எனப் பயந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்கின்றது.
அதற்குப் பயந்து அரசாங்கம் தேர்தலை ஒத்திப்போட்டால் இலட்சக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிப் போராடுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.