கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்” என்று கூறியது விவாதப் பொருளானது.
அதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். திமுக இளைஞரணி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக மவுனம் காத்து வந்த ஆளுநர், தற்போது தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.
அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அல்லது அனுமானம் செய்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது” என்று கூறியுள்ளார்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று கூறியுள்ளார்.