இளைஞர்களை ஈர்க்கவும் இளைஞரணி செயலாளர் அமைச்சர் பொறுப்புக்கு வருவது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை கோ.புதூர் பகுதியில் மாநகர் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 1000 பேருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னையில் இன்று அனைத்து துறை அதிகாரியுடன் நிதி அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்.
கடந்த, ஆண்டு தமிழகம் நிதியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்ததோ, இந்த ஆண்டு அதனை விட ரெக்கார்ட் முன்னேற்றம் அடையும். படித்தவர்கள், பணியை தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் சரியான இடத்தில் அமர்ந்தால் என்ன விளைவு ஆகும் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்றார்.
பேராசியர் அன்பழகன் எனக்கு ஓர் வழிகாட்டியாக இருந்தவர். நீ எப்போது அரசியலுக்கு வந்தாலும் பி.டி.ஆர் மகன் என்று தான் சொல்வார்கள் எனவே அரசியலுக்கு வா என என்னை அழைத்தார்.
ஆனால் நான் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பின்னர் தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் எனக்கு கிடைத்த சுதந்திரம் தனி சுதந்திரம் என பேசினார்.மக்களின் சராசரி வயது 35 ஆக உள்ளது. திமுகவினர் வயது அதைவிட அதிகம். மேலும் மூத்த அமைச்சர்களின் வயது 70 ஆக உள்ளது. இந்த வயது இடைவெளியை குறைப்பதற்காகவும் இளைஞர்களை ஈர்க்கவும் இளைஞரணி செயலாளர் அமைச்சர் பொறுப்புக்கு வருவது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது.
அதற்காக உதயநிதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் அசையும் சொத்தாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் என்னிடம் நெருங்கி பழகக் கூடியவர் அவரின் பணியில் தேவையான முன்னேற்றங்களுக்கு என்னால் முடிந்தவற்றை அண்ணன் என்ற முறையில் செய்வேன் என கூறினார்.
பதவி வரும் போகும், மனிதனுடைய அடையாளம், பெருந்தன்மை, அன்பு பாசம், அது என்றும் மாறாது. இன்று எத்தனையோ பதவி வந்தாலும் பண்பாளரின் மகன் என்பதுதான் என் முக்கிய அடையாளம் அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது எடுக்கவும் முடியாது என்றார்.