கொடைக்கானலில் நிலவி வரும் உறைபனியையும் இந்த அழகிய ரம்மியமான காட்சியினை பார்த்து சுற்றுலாப்பயணிகள் ரசித்து செல்கின்றனர்.கொடைக்கானலில் மீண்டும் உறைபனி பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் மலைகளின் இளவரசி.
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல் ஒரு குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும். இந்நிலையில் இந்த வருடம் உறைபனியானது டிசம்பர் மாதத்தில் ஒரு சில தினங்கள் மட்டும் நிலவியது அதன் பின் சில நாட்களாக மழை, அடர்ந்த பனி மூட்டம் நிலவி வந்தது, இதன் காரணமாக உறைப்பனி தாக்கம் மலைப்பகுதியில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 11டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 8 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்ப நிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப் புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது.
இந்த உறைபனியானது கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டது.அந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது, மேலும் ஒரு சில இடங்களில் பனிக்கட்டியாகவும் காணப்பட்டது.
கொடைக்கானலில் நிலவி வரும் உறைபனியை காலை வேலையிலேயே இந்த அழகிய ரம்மியமான காட்சியினை பார்த்து சுற்றுலாப்பயணிகள் ரசித்து செல்கின்றனர்.காலை வேளையில் கடும் குளிர் நிலவுவதால் குளிரை சமாளிக்க பாதுகாப்பான ஆடைகளை அணிந்து சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் சாலைகளில் நடமாடி வருகின்றனர்.
மேலும் பனியானது ஏரியில் ஆவியாக செல்லும் காட்சி ரம்மியமாக காட்சியளிப்பதை நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.