சென்னை: மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக நிற்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை: தமிழ் திரை உலகின் மன்னாதி மன்னனாக திகழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்கள் திலகமாக உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சினிமாவில் தனிப்பெரும் ஹீரோவாக நடித்து புரட்சித்தலைவராக உயர்ந்தவர் எம் ஜி ஆர் என்று அழைக்கப்படும் எம்ஜி ராமச்சந்திரன். குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு ரசிகர்களும் ஏராளம். நல்ல கருத்துக்களை, தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று தனது திரைப்படங்களில் பாடல்களின் மூலம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினருக்க மரியாதை செலுத்தும் விதத்தில் கதைக்களங்களைத் தேர்வு செய்தார். வயதானவர்கள்,பெண்கள் மீதான எம்ஜிஆரின் உயர்ந்த கருத்துக்கு, தாய்க்குலத்திடம் வரவேற்பு அதிகரித்தது. எம்.ஜி.ஆரின் இயல்பிலும் சுபாவத்திலும் கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவை தான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது.
அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழக கட்சியில் இணைந்து பணியாற்றினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்படவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார். ஏழை மக்களள் மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்களுக்காக பல நல திட்டங்களைக் கொண்டு வந்தார்.
பசியிலும் வறுமையிலும் தான் வாடியது போல், பிள்ளைகள் பசியோடிருக்கக் கூடாது என பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர் கடந்த 1987, டிசம்பர் 24ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.