ராமேஸ்வரம் அருகே கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி வீசிய 17 கிலோ தங்கக்கட்டிகள், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே புதன்கிழமை அன்று , நடுக்கடலில் தங்கம் கடத்திவரப்பட்ட படகை கடலோர காவல்படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, கடலோரக் காவல்படையைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கம் எடுத்து வந்த பார்சலை கடலில் தூக்கி வீசினர். உடனடியாக, படகில் வந்த நாகை மீரான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுத்துறையினர், தங்கம் வீசப்பட்ட பகுதியில் நீர்மூழ்கி வீரர்கள் துணையுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில், சுமார் 30 மணிநேர சோதனைக்குப் பிறகு, கடலில் வீசப்பட்ட 17 புள்ளி 74 கிலோ தங்கக்கட்டிகளை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றின் மதிப்பு 10 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகும். இதனிடையே துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 21 பேர் தங்கம் கடத்தி வந்தது குறித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி விமானத்தில் வந்த 31 பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 21 பேர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.