விருதுநகர் மாவட்டம் என்றாலே வறட்சி தான். எங்கு பார்த்தாலும் காய்ந்த கரிசல்காடாய் இருக்கும் இவ்வூரில் வண்ண வண்ண வெளிநாட்டு பறவைகள் ஓய்வெடுக்க வருகிறது என்றால் எவரும் நம்ப மாட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகள் பறவைகள் வந்து செல்லக்கூடிய மினி வேடந்தாங்கலாக உள்ளது. சரியாக செப்டம்பர் மாதம் இங்கு வரும் பறவைகள் பிப்ரவரி மாதத்தில் இங்கிருந்து புறப்படுகின்றன.அப்படி பறவைகள் வந்து செல்ல கூடிய பகுதிகளாக இருப்பது அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் காணப்படும் நீர் நிலைகள் ஆகும்
தாயில்பட்டி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ளது தாயில்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயில் பறவைகள் வந்து செல்லக்கூடிய நிலையில் பார்பதற்கு பறவைகள் சரணாலயமாக காட்சியளிக்கிறது. இந்த கண்மாய் மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா போன்ற பறவைகள் அதிக அளவில் வரும் நிலையில், அவை யாவும் இங்குள்ள மீனிற்காக வருவதாக கூறப்படுகிறது.பறவைகளை வேடந்தாங்கல் செல்லாமல் அருகிலே பார்த்த ரசிக்க விரும்புவோர் தாராளமாக இங்கு வரலாம்.
என்ன தான் பறவைகளோடு கண்மாய் பார்க்க அழகாக இருந்தாலும், கண்மாய் பராமரிப்பு இன்றி காணப்படுவது அதன் மொத்த அழகை குறைப்பதாக உள்ளதாகவும் இதை சீரமைப்பு செய்து முறையாக பராமரித்தல் இன்னும் அதிக பறவைகள் வந்து செல்லும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.