சென்னை: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் ஹனுமான் காட் பகுதியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் பாரதியாரின் சிலையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் மகாகவி பாரதியார். இவர் தனது பாடல்கள் மூலம் விடுதலை உணர்வை மக்களிடையே எடுத்துச் சென்றார். மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையே தமிழக அரசு சார்பில் காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்
பாரதியார் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துள்ளார். அப்படித்தான் அவர் தனது இளமைக் காலத்தில் 1898 முதல் சில ஆண்டுகள் உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தான் அவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியைக் கற்றார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியில் ஹனுமான் காட் என்ற பகுதியில் தான் பாரதியார் வாழ்ந்திருந்தார். இதற்கிடையே அவர், காசியில் தங்கியிருந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் காசியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த சிலையைத் திறந்து வைத்தார்.
2.5 அடி உயரம் கொண்ட இந்த மார்பளவு பாரதியார் சிலை 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.. பாரதியார் வாழ்ந்த அந்த இல்லத்தில் இப்போது அவரது உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் உரிய அனுமதி பெற்று பாரதியார் தங்கியிருந்த இடத்தில் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் இப்போது ஒரு மாதம் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் வகையில் இந்த சங்கமம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே பலர் தமிழ்நாட்டில் இருந்து காசிக்குச் சென்றுள்ளனர்.
இந்தச் சூழலில் தான் ஹனுமான் கேட் பகுதியில் நான்கு ஆண்டுகள் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில், நினைவு சிலையை அமைத்துள்ளது தமிழக அரசு. எனவே, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்குச் சென்றுள்ள மக்கள் பாரதியார் வாழ்ந்த இல்லத்தையும் பார்த்து வருகின்றனர்.