விமானத்தில் சிறுநீர் கழித்த தொழிலதிபர் மீது எடுக்கபட்ட நடவடிக்கை தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சிறுநீர் கழிப்பு:
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஒரு ஆண் பயணி, சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாகவும், சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியானது.
பாதிக்கப்பட்ட பெண்:
இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதிய ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அவரை அதே இருக்கையிலேயே அமருமாறு தெரிவித்துள்ளனர். விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்ததால் வேறு இருக்கை இல்லை என்பதாலும் அவ்வாறு கூறியுள்ளனர். விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
புகார்:
இந்நிலையில் ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த பெண் புகார் கடிதம் எழுதினார். மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை பொது இயக்குநரகமும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
30 நாட்களுக்கு தடை:
இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகத்திற்கு ஏர் இந்தியா அளித்த விளக்கத்தில், இருவரும் சமாதானமாகிவிட்டதால் ஆண் பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் சிறுநீர் கழித்த தொழிலதிபர் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.