ரியாத்: ஜுவண்டஸ், மான்செஸ்டர் யுனைட்டேட் கால்பந்து கிளப் அணிகளில் இருந்து அடுத்தடுத்து விலகிய போர்ச்சுகல் வீரரும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவரை விளையாட விடாமல் அவமதித்தபோதே அவரது ஆட்டம் முடிந்துவிட்டதாக பலர் பேசிய நிலையில் இதன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து உள்ளார் ரொனால்டோ.
நவம்பர் மாதம் தொடங்கிய பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி கத்தாரில் நடைபெற்று கடந்த டிசம்பர் 18 ஆம் ஆண்டு தேதி இறுதிப் போட்டியோடு நிறைவடைந்தது.
அர்ஜெண்டினா அணி இந்த போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
ரொனால்டோவுக்கு அநீதி
இந்த உலகக்கோப்பையில் ரொனால்டோவுக்கு எதிராக பல விசயங்கள் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்பட்ட இதில் அவரை விளையாட அனுமதிக்காமல் அதன் பயிற்சியாளர் பெர்னாண்டோ பெஞ்சில் அமர வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர்விட்ட ரொனால்டோ
போர்ச்சுகல் மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியதை ஏற்க முடியாமல் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதது அவரது ரசிகர்களை கண்ணீர் விடவைத்தது.
இது தொடர்பாக ரொனால்டோ எழுதிய பேஸ்புக் பதிவில், ‘போர்ச்சுகலுக்காக ஒரு உலகக் கோப்பையை வெல்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது.
பெரிய கனவு
நல்ல விசயமாக நான் போர்ச்சுகல் உட்பட சர்வதேச அளவிலான பல தொடர்களில் விளையாடி கோப்பைகளை வென்றேன். ஆனால் நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயரமான இடத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. எனது இந்த கனவை நனவாக்குவதற்காக நான் கடுமையாகப் போராடினேன்.
16 வருடங்களில் உலகக் கோப்பைகளில் நான் விளையாடிய 5 தொடர்களில், பல கோல்களை அடித்து இருக்கிறேன்.
முடிந்த கனவு
சிறந்த வீரர்களின் பக்க பலத்தோடும், லட்சக்கணக்கான போர்த்துகீசிய மக்களின் ஆதரவையும் நான் பெற்று இருக்கிறேன். அவர்களுக்காக நான் என்னுடைய அனைத்தையும் கொடுத்தேன். தற்போது அனைத்தையும் மைதானத்திலேயே விட்டுவிட்டேன்.
இதுவரை போராடாமல் என்னுடைய முகத்தை நான் திருப்பியது இல்லை. எனது கனவையும் நான் கைவிட்டது இல்லை. ஆனால், நேற்று எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது.
ஊகங்கள்
இதற்கு அதிக அளவில் ஆவேசப்பட வேண்டிய அவசியம் கிடையாது. எத்தனையோ விசயங்கள் என்னை பற்றி பேசப்பட்டன. ஏராளமான விசயங்கள் எழுதப்பட்டன. பல விசயங்கள் ஊகிக்கப்பட்டு உள்ளன.
ஆனால், போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு என்பது ஒரு கணம் கூட மாறவே இல்லை என்பதை உங்களிடம் நான் தெரியப்படுத்தவும், நீங்கள் அனைவரும் இதனை அறிய வேண்டும் எனவும் விரும்புகிறேன்.கோல்களுக்கு போராடுவேன்
நான் எப்போதும் அனைத்து வீரர்களின் கோல்களுக்காகவும் போராடுபவனாகவே இருந்தேன். அதேபோல் எனது சக வீரர்களிடம் என் நாட்டிற்காகவும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். உலகக்கோப்பை கனவு நீடிக்கும் போது நன்றாக இருந்தது… தற்போது, நல்ல ஆலோசகராகவும், ஒவ்வொருவரும் அவரவர் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் நேரம்.’ என்றார்.
பாலஸ்தீன், சிரியாவுக்கு ஆதரவு
இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்படும் பாலஸ்தீன் மக்களுக்காகவும், சிரியா குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்தவர் ரொனால்டோ.
அவர்களுக்கு பல கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் தன் முன் இருந்த கொக்க கோலா பானத்தை அவர் அங்கிருந்து அகற்றியது பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கொக்க கோலாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
அல் நஸ்ர் அணி
இதோடு ரொனால்டோவின் விளையாட்டு வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக பலரும் பேசி வந்த நிலையில், சவூதி அரேபிய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார் ரொனால்டோ.
ஆம் அல் நஸ்ர் என்ற 65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபிய லீக் அணிக்காக விளையாட ரொனால்டோ 2025 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்காக ரூ.4,400 கோடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.