சந்திவெளியில் மீன்பிடிக்க சென்றவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சித்திரைப்புத்தாண்டுக்காக பலகாரம் சுடும் வேலைகளுக்கு வீட்டாருடன் உதவியாகயிருந்து விட்டு நேற்றிரவு மீன்பிடிப்பதற்காகச் சென்ற மீனவரே நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி, வட்டையார் வீதியைச்சேர்ந்த கந்தையா பவானந்தன் (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையானவர் வழமையாக சந்திவெளி ஆற்றில் இரவு வேளைகளில் தோணியில் சென்று மீன்பிடித்து அதிகாலையில் கரைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவர்.
நேற்றிரவு (12) மீன்பிடிக்கச்சென்ற இவர், இன்று காலை உரிய நேரத்துக்கு கரை திரும்பாததால் இவரது மகன்கள் இருவர் தோணியொன்றில் சென்று தேடிய போது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டதால் அதிலிருந்து மீள முடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதைக் கண்டுள்ளனர்.
பிள்ளைகள் இருவருமாக தந்தையின் சடலத்தை கரைக்குச் கொண்டு வந்த பின் சந்திவெளி பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளையேற்று சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிசாரைப் பணித்தார்.
பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-கிரான் செய்தியாளர், மு.கோகிலன்-