Monday, April 29, 2024
Homeஇந்திய செய்திகள்சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள்

சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் ‘அட்மிசன் அடி’ காரணமா? – அதிர்ச்சி தகவல்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

சிறுவனின் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த கூர்நோக்கு இல்லம் குறித்து அங்கு முன்னர் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

இறந்த சிறுவனின் தாயார் பிரியா, சிறார் இல்லத்தில் தனது மகனுக்கு மோசமான அனுபவம் இருந்ததாகவும் மர்மமான முறையில் தாக்கப்பட்டு தனது மகன் இறந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய இறந்த சிறுவனின் தாயார் பிரியா தனது மகனைக் கடைசியாகச் சந்தித்த தருணத்தில், தன்னை முடிந்தவரை விரைவில் ஜாமீனில் எடுக்கவேண்டும் என்றும், செங்கல்பட்டு இல்லத்தில் நடக்கும் ‘விஷயங்கள்’ மிகவும் அச்சம் கலந்தவையாக இருப்பதாகவும் சொல்லியதாகத் தெரிவித்தார்.

செங்கல்பட்டு இல்லத்தில் முன்னர் பணிபுரிந்த அனுபவமுள்ள அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, சிறுவர்கள் சிலர் தங்களைத் தாக்க வந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஒரு சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள காரணங்களால் அவர்களைச் சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் நேரத்தில் தங்களுக்கும் ஆபத்துகள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

ஒரு சில சிறார்கள், இல்லத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்று திட்டமிட்டு அதிகாரிகளைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன என்கிறார்கள்.

பாதுகாப்பு கருதி பிபிசி தமிழிடம் பேசிய அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தில் முன்னர் தங்கியவர்கள், இளைஞர் நீதி குழுமம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்துவதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான சீர்திருத்த பள்ளிகளில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லம்.

1900களில் இருந்து செயல்பட்டு வரும் செங்கல்பட்டு இல்லத்தில், ஒன்றிணைந்த மதராஸ் மாகாணமாக இருந்த பகுதிகளில் இருந்து தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகும்கூட, 1970களின் தொடக்க காலம் வரையில், செங்கல்பட்டு இல்லத்தில், கேரளா, ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தண்டனை பெற்ற சிறுவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்று 1970களில் அந்த இல்லத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி ஒருவர் நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

”நான் பணிபுரிந்த காலகட்டத்தில் 1,200 சிறுவர்கள் அங்கு இருந்தார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் இங்கு கொண்டு வந்து ஒப்படைப்பார்கள்.

அந்தந்த மாநில அரசுகள் தமிழக அரசுக்கு இந்த சிறார்களை பராமரிப்பதற்கான செலவுக்கான நிதியை அளித்துவிடுவார்கள். 1970களின் பிற்பகுதியில்தான் பிற மாநிலங்களில் தனியாக சிறார் கூர்நோக்கு இல்லங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை அங்கு சிறுவர்கள் இறந்து போனதற்கான தரவுகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை,” என்று அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

ஆரம்பக்கட்டத்தில் சிறார் சிறை என்று அறியப்பட்ட இந்த இல்லம், பின்னர் ‘அப்ரூவர்’ ஸ்கூல் என்று அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் அதை சீர்திருத்தப் பள்ளி என்றார்கள்.

தற்போது சிறார் கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறார் சிறப்பு இல்லம் என இரண்டு பிரிவாக அந்த இல்லம் செயல்பட்டு வருகிறது என்கிறார் ஒரு முன்னாள் அதிகாரி. குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணை நடைபெறும் நேரத்தில் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள். அவர்கள் மீது குற்றம் நிரூபணம் ஆகிவிட்டால், அவர்களின் தண்டனை காலத்தை சிறப்பு இல்லத்தில் கழிக்கவேண்டும் என்பதுதான் நடைமுறை.

”ஒரு கட்டத்தில் சிறார் இல்லம் முழுநேர கல்விக் கூடமாகவும் மாறியது. பல மாணவர்களுக்கு கல்வியைத் தொடரும் வாய்ப்பை அளித்தது. காலப்போக்கில், தண்டனை பெற்று வந்த சிறுவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறமைகளை வளர்க்கும் இடமாகவும் மாறியது.

பாட்டு, இசை, ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புகளும் கற்பிக்கப்பட்டன. ஒரு சில சிறுவர்கள், இந்த இல்லத்தில் இருந்த நூலகத்தைப் பயன்படுத்தி, திறமைகளை வளர்த்துக்கொண்டார்கள். ஆனால், ஒரு சிலர், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் மீண்டும் சிறார் இல்லத்திற்கு வருவதையும் வாடிக்கையாகவும் வைத்திருந்தனர்,” என்கிறார் அவர்.

சிறார் இல்லத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பது குறித்து சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”நாங்கள் சிறுவர்களைத் திருத்துவதற்குப் பல முயற்சிகளைச் செய்வோம். கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களை நான் நேரடியாகக் கையாண்டிருக்கிறேன்.

தனது வழக்கைப் பற்றிய அச்ச உணர்வு மேலிட்டு, அவர்களில் ஒரு சிலர் அமைதியாக இருந்துவிடுவார்கள். 25 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்தவரை, தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள் ஆபத்தானவர்கள்.

மனம் திருந்தி வாழவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு சுலபத்தில் வருவதில்லை. சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்துகொண்ட சில சிறுவர்கள், தொடர்ச்சியாக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு, எங்கள் இல்லத்திற்கு வருவார்கள்.

அதுபோல பலமுறை இல்லத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். என் தாயார், மனைவி, பிள்ளைகளைக் கொச்சைப்படுத்தி பேசினான்.

இதுபோன்ற பேச்சுகளால், நாம் ஆத்திரப்பட்டு, அவர்களை அடிக்கும் போது, தப்பித்து ஓட முயல்வார்கள். என்னிடம் வாக்குவாதம் செய்த சிறுவனை ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. நான் அவனை பிரம்பால் அடித்திருக்கிறேன். அது தவறுதான். ஆனால் அவன் அன்று இல்லத்தில் இருந்து தப்பித்து ஓடுவதை நான் தடுப்பதற்கு வேறு வழி தெரியவில்லை,” என்கிறார் அந்த முன்னாள் அதிகாரி. 

2015இல் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, தப்பிச் சென்ற சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments