மாவட்டத்தில் குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணத்தில் போலீயான ரசீதை கொடுத்து ரூ.60 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த வனத்துறை அதிகாரி ராஜேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இதில் தீபாவளி வார விடுமுறை நாட்கள் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவது வழக்கம். போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளதால் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 60 ரூபாயும் குழந்தைகளுக்கு 30 ரூபாயும், இருசக்கர வாகனம் நிறுத்த 20 ரூபாயும், கார்கள் நிறுத்த 50 ரூபாயும் கட்டணமாக வனத்துறை வசூலித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டண வசூலில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் இரண்டு மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும் இதில் ஒரு மிஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் பதிவு செய்யபட்டுள்ளது. மற்றொரு மெஷினில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி பண முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டது செய்திகள் வெளியாகியது.
கடந்த ஆறு மாத காலத்தில் பல லட்சம் ரூபாய் இதில் முறையீடு நடைபெற்றுள்ளதாகவும் இதற்கு முன்னர் இருந்த வனச்சரக அதிகாரியும் இதேபோன்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவர் ராஜேஷ் குமார் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் பணியிடை நீக்கம் செய்தார். மேலும், வனவர் ராஜேஷ் குமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.