முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலை செய்து உயிரிழந்த ஜூட் குமார் ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு சாட்சியப் பதிவுக்காக கொழும்பு மேலதிக நீதவான் ரஜின்ரா ஜயசூரிய முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 4ஆம் இலக்க சாட்சியின் சாட்சியத்தைப் பெறுவதற்கு தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெற முடியாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி வழக்கின் மரண விசாரணை ஜனவரி 10, 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் உதவியை பெற முடியாமல் வழக்கு ஒத்திவைக்கப்படுவது இது 2வது முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
டயகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வீட்டின் வறுமை காரணமாக முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த நிலையில், உடலில் தீப்பிடித்து எரிகாயங்களுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்குப் பின்னர், சம்பவத்திற்கு எதிராக சமூக மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு பல தகவல்கள் வெளியாகின.
எனினும் சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்வி இன்றும் பலரிடையே இருந்து வருகின்றது.