யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு பணம் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் இணையம் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்த வைத்தியர் தர்மதாஸ் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“நீர்கொழும்பு கொச்சிக்காடு பகுதியில் உள்ள முகவர் ஒருவருக்கு வெளிநாடு செல்வதற்காக 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 56 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ளனர்.
பல தடவைகள் கொழும்பு சென்ற போதும் முகவர்கள் எங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் அலைக்கழித்தனர்.
பணத்தை திருப்பி கேட்ட போது எங்களை மிரட்டினர். எனவே, பணத்தை மீட்க உதவ வேண்டும்,” என்றார்.