ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதில் ஒரு குழுவினர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் என்பவரின் ஆட்டம் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இறங்கிவிட்டு மதியம் சுமார் 12 மணியளவில் ஆட்டோவை அனுப்பி விட்டனர். வழக்கம் போல் மதிய உணவிற்காக செவிலிமேடு அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.
பின்னர் பையை திறந்து பார்த்தபோது அதிலிருந்து புகைப்படத்தை பார்த்து இவர் நம் ஆட்டோவில் வந்த பயணி என்பதை உறுதி செய்தார். உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டு ராஜஸ்தான் பயணிகள் தங்கியிருந்த யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிக்குச் சென்று தன் ஆட்டோவில் பயணித்த ராஜஸ்தான் பயணியை தேடி கண்டுபிடித்து அவர் தவறவிட்ட 50.000 ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை திருப்பி கொடுத்தார்.
இதனைக் கண்ட ராஜஸ்தான் பயணி மிகுந்த மகிழ்ச்சியோடு ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி பாராட்டினர்.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆட்டோ ஓட்டுநர் பூபாலனுக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் பயணி தவறவிட்ட ரொக்கப் பணம் ரூபாய் 50,000 மற்றும் முக்கிய ஆவணங்களை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் பூபாலனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.பின்னர், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஆட்டோ ஓட்டுனர் பூபாலன் செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பாராட்டினார்.