மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடக்கின்றன.
மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 1,200 கோடி என்ற திட்ட மதிப்பீடு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், 1,970 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட ரூ. 700 கோடியில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீதத்தை ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்கும். மீதியை மத்திய அரசு வழங்குகிறது.
இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 12 கோடியே 35 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மற்ற மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இது குறைவு ஆகும்.
மதுரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.12.35 கோடி மட்டுமே.
இது RTI கேள்விக்கான பதில்.
இதையே நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டிருந்தால் அமைச்சர் கொந்தளித்திருப்பார்.
“தனியார் கல்லூரிகளின் ஏஜென்ட்கள்” என்று வசையைத் துவக்கி “கழுத்தை நெரிப்பது” வரை பேசியிருப்பார்
இதன்மூலம் மத்திய அரசு வேண்டுமென்றே தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.