இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). இதில் இவி என்பது, எலெக்ட்ரிக் வாகனம் (EV – Electric Vehicle) என்பதை குறிக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது தன்வசம் வைத்துள்ளது.
ஓரளவிற்கு குறைவான விலை, சிறப்பான ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தொலைவு), அட்டகாசமான வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் ஆகியவைதான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாற்றியுள்ளன. இந்த சூழலில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் உரிமையாளர் ஒருவருக்கு, வித்தியாசமான பிரச்னை ஒன்று ஏற்பட்டுள்ளது. மாடுகளால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டதை போன்றதொரு பிரச்னைதான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரிலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாடுகள் மோதியதால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடிக்கடி சேதமடைந்து வந்தன. நாம் இங்கே பேசி கொண்டிருக்கும் சம்பவத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் சார்ஜரை (Charger) மாடு ஒன்று சேதப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல லட்சக்கணக்கான கால்நடைகள் ஒழுங்குபடுத்தப்படாமல் சுற்றி கொண்டுள்ளன. வாகனங்களின் குறுக்கே திடீரென வந்து, ஏராளமான விபத்துக்களுக்கும் அவை காரணமாக மாறியுள்ளன. ஆனால் மாடு ஒன்று, எலெக்ட்ரிக் காரின் சார்ஜரை சேதப்படுத்தியதாக நாம் கேள்விபடுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வைத்திருக்கும் சுமித் என்பவருக்குதான் இந்த வித்தியாசமான பிரச்னை ஏற்பட்டுள்ளது. நடந்த சம்பவங்களை எல்லாம் அவர் டிவிட்டர் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். தனது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் சார்ஜ் ஆகி கொண்டிருந்தபோது, சார்ஜிங் கேபிளை மாடு ஒன்று இழுத்து விட்டதாக சுமித் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் சார்ஜிங் கேபிள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது.
இந்தியாவில் கால்நடைகளால் வாகனங்களுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் சார்ஜிங் கேபிளை இன்னும் வலுவாக உற்பத்தி செய்தால் நன்றாக இருக்கும். கால்நடைகள் இழுத்தாலும் சேதம் அடையாத அளவிற்கு தயாரித்தால், எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு தேவையில்லாமல் பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். இந்த சூழலில் இந்த பிரச்னையை சரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என டிவிட்டர் மூலமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சுமித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவருக்கு உதவி செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் சேதமடைந்த சார்ஜரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரி செய்து தருமா? அல்லது புதிய ஒன்றை வழங்குமா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. எனினும் சுமித் இந்த பிரச்னையில் இருந்து விரைவில் மீண்டு வருவார் என நாம் நம்பலாம். ஏனெனில் சார்ஜர் இல்லாவிட்டால், எலெக்ட்ரிக் கார் வெறும் காட்சி பொருளாக மாறி விடும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. தனது ஆதிக்கத்தை மேலும் வலுவாக்கி கொள்வதற்காக எதிர்காலத்தில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) ஒன்றாகும். டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது, சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும் (Tata Altroz EV) விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ஏழை மக்களின் கார் என பெயர் பெற்ற நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா நானோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருகிறது என்றால், அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில், டாடா நானோ எலெக்ட்ரிக் கார் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.