அமெரிக்காவில் ஒரு நபர் தனது மனைவி, 5 குழந்தைகள் என 7 பேரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் மோசமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
அந்நாட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்நாட்டில் துப்பாக்கி சார்ந்த வன்முறைகள் சர்வ சாதாரணமாகியுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்துள்ள குடும்ப மரணம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது. அந்நாட்டின் உத்தா மாகாணத்தின் எனோக் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மைகேல் ஹைக்ட்.
42 வயதான இவர் தனது மனைவி தவுஷா மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.மேலும், இவர்களுடன் தவுஷாவின் தாய் கெயில் ஏரால் என்பவரும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மைகேலின் மனைவி தவுஷா விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். விவாகரத்திற்கான காரணம் வெளியே தெரியவில்லை.
இந்நிலையில் தான், கடந்த புதன்கிழமை அன்று மைகேல் தனது மனைவி தவுஷா, முன்று மகள், இரு மகன் உள்பட ஐந்து குழந்தைகள் மற்றும் மாமியார் கெயில் ஆகிய ஏழு பேரையும் தூப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பெருங்கவலையுடன் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல், உத்தா மாகாண கவர்னர், எனோக் நகர மேயர் ஆகியோரும் இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர். விவாகரத்து தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.