இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது.
தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் பொங்கலுக்கு வருவதற்குள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அளவிட முடியாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் புதுச்சேரியில் எங்கு திரும்பினாலும் அஜித்- விஜய் கட் அவுட்டுகள், பேனர்கள் என இருக்கிறது. இதற்கு பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் அன்னதானங்கள் கொடுத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே வேளையில் காலையில் காந்தி சிலை அருகே பழைய பாலத்தின் தூண்களில் அஜித் ரசிகர்கள் பேனர் கட்டி துணிவு படத்திற்கு வரவேற்பு கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக விஜய் ரசிகர் வம்பாக்கீரப்பாளையத்தில் கடலுக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் வாரிசு படத்துக்கு வாழ்த்து பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர்.
பொங்கல் விருந்துக்கு முன்பு இந்த இரு ரசிகர்களின் வரவேற்பு பேனர்களே பெரிய விருந்தாகவே இருப்பதாக சினிமா ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.