கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.இதற்காக, மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் மூலம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, பயன்படுத்தப்படாத சிலிண்டர்களை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும், அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், என்.95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் தயார் நிலையில் வைக்கவும்,
மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்கவும், கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளை இருப்பு வைக்கவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தொற்று பாதிப்பு குறித்து உடனடியாக முடிவை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.