செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் டயரில் காற்று பிடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு சென்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக அவ்வழியே சென்ற அரசு பேருந்தில் ஏறி ஆம்புலன்சை மடக்கி பிடித்தார்.
அப்போது, ஆம்புலன்ஸ் வண்டியை திருடிச்சென்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடித்து கொடுத்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவரது பெயர் பாலாஜி (எ) விக்கி என்றும், மதுராந்தகம் அருகே உள்ள திருவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரிடம் மேலும் துருவிதுருவி விசாரணை நடத்தியதில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதும், உடல் முழுவதும் பலத்த காயதழும்புகள் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஆம்புலன்ஸை திருடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.