இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்து வருகிறது. இதன் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஹாக்கி உலகக்கோப்பை தொடரை ஒடிசா மாநிலம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 2 க்கு 2 என்ற கோல்கணக்கில் சமநிலை வகித்தன.
இருப்பினும் கடைசிக் கட்டத்தில் 45 மற்றும் 59 ஆவது நிமிடங்களில் இந்தியா அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. 4 க்கு 2 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. வரும் 22ஆம் தேதி நடக்க இருக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. இதனிடையே கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தை இந்திய அணி சமன் செய்தது. அதன்படி நேற்று நடந்த வேல்ஸ் அணியுடனான போட்டியையும் வெற்றியுடன் தொடர்ந்துள்ளது இந்தியா