பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கியை மையமாகக் கொண்டு ரிக்டர் 7.8 என்ற அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகள் கோர பாதிப்பை சந்தித்தன. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 24,000 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிலநடுக்கம் நிகழ்ந்து நாள்கள் கடந்த நிலையில், தற்போதும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் இடிபாடுகளில் சிக்கி இருந்த பிறந்து 10 நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சுமார் நான்கு நாள்கள் அதாவது 90 மணிநேரம் கழித்து மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு யாகிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹடாய் என்ற மாகாணத்தில் இந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கடும் குளிரில் இடிபாடுகளுடன் சிக்கிய இந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அதிசயமாக பார்க்கப்பட்டது. குழந்தையை இடிபாடுகளில் இருந்து மீட்டு கதகதப்பான கம்பளியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நெகிழ்ச்சியுடன் அதற்கு கமெண்டுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த குழந்தையின் தாயாரையும் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நலன் குறித்த கூடுதல் தகவல் ஏதும் வெளிவரவில்லை. துருக்கி நூற்றாண்டு காணாத பேரிடரை சந்தித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் எர்டோகான் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் வரலாறு காணாத சேதமடைந்துள்ள துருக்கி மக்கள் உறைவிடம், குடிநீர், மின்வசதி ஏதும் இன்றி தவித்து வருகின்றனர்.