நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கி நாட்டில் இந்தியர் ஒருவர் காணாமல் போனதாகவும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. மேலும் நேற்று இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் கட்டடங்களில் சீட்டுக்கட்டுபோல் இடிந்து பெறும் பேரிடர் ஏற்பட்டது. இதுவரை 11,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாம் நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் இருந்து மனிதாபிமான உதவிகளை அளிக்க குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் மோப்ப நாய்கள், ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களும் ஆர்வத்துடன் மீட்புப்பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் நீர்ச்சத்து இழப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் துருக்கியில் காணாமல் போனார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குடும்பத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருந்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் 10 பேர் துருக்கியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.