ஆந்திர மக்களுக்கும் நமக்கும் மனவேற்றுமை இருக்கலாம். ஆனால் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்க வேண்டும் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் சமீபத்தில் சிறந்த அசல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இதன் மூலம் உலகப் புகழ் பெற்றார்.
இதையடுத்து இந்திய பிரபலங்களும், ரசிகர்களும் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூஸ் 18 உடனான நேர்க்காணலில், ”அவர்கள் ஒரு மகத்தான பணியை செய்துள்ளனர். இது ஒரு பெரிய சாதனை. ஒவ்வொரு துறையிலும் இது மீண்டும் மீண்டும் நடக்க வேண்டும். எம்.எம்.கீரவாணி ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட இசையமைப்பாளர்.
அவர் 35 வருடங்களாக திரைத்துறையில் பணிபுரிந்த நிலையில், அதை விட்டுவிட விரும்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவரது கெரியர் தொடங்கியது என என் பிள்ளைகளிடம் கூறினேன். ஆர்.ஆர்.ஆர் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன் ஒருவர், “ஆந்திர மக்கள் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஆனால் நாம்தான் நமது எதிரியை நேசிக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு, “நாம் அனைவரும் ஒரே குடும்பம். நமக்குள் தவறான புரிதல்கள் இருக்கலாம்.
ஆனால் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான். அவரின் இந்த பதிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.