சிவா இயக்கும் பிரம்மாண்டமான படத்தில் சூர்யா நடித்துவருகிறார். இந்தப் படம் 3டி பீரியாடிக் டிராமாவாக 10 மொழிகளில் உருவாகிவருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த மாதம் பீரியட் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதனையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் அல்லது சுதா கொங்கரா இயக்கும் படம் இதில் ஒன்றில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் ராஜன்பிள்ளை என்பரின் வாழ்க்கை வரலாற்றில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிருத்விராஜ் ஈடுபட்டுவருகிறார். பிருத்விராஜ் இயக்கிய லூசிஃபர், புரோ டேடி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த ராஜன் பிள்ளை பிரிட்டானியா நிறுவனத்தின் முதல் இந்திய சேர்மன். இவர் பிஸ்கட் கிங் என்றும் அழைக்கப்பட்டார். இவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது.