சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
விருகம்பாக்கத்தில் கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.