புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.
இதன்படி, பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவற்றின் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்