முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதஹேவஹெட்ட அமைப்பாளருமான காமினி விஜயபண்டார ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி மோதியதில் 11 வயது மாணவனும், தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
கண்டி, தர்மராஜா கல்லூரி சந்தியில் உள்ள பாதசாரி கடவையில் செவ்வாய்க்கிழமை (16) மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கண்டி, புவேலிக்கடை, சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சண்டிக சம்பத் ரொட்ரிகோ மற்றும் அவரது மகன் விமந்த ரொட்ரிகோ ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். வகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட மகனை, தந்தையார் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதஹேவஹெட்ட தொகுதி அமைப்பாளருமான காமினி விஜயபண்டார பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தந்தையின் கையை பிடித்துக்கொண்டு வீதியைக் கடந்த சிறுவன், வாகனம் மோதியதில் சுமார் 15 அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான தந்தை மற்றும் மகன் இருவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தந்தை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் மகன் உயிரிழந்துள்ளார்.
ரொட்ரிகோ குண்டசாலையில் புகை வெளியேற்றத்திற்கான சான்றிதழ் வழங்கும் இடத்தில் பணிபுரிந்து வந்தார். உயிரிழந்த சிறுவனிற்கு ஒன்பது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.