முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக தோண்டிய 7 பேர் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (23) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் தகவல் வழங்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த பகுதிக்கு சென்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதி இறுதி போர் நடைபெற்ற பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் இருப்பதாக தெரிவித்து தென்பகுதியினை சேர்ந்த பலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த காலங்களில் கைதாகிவந்துள்ள நிலையில் இன்று (23) தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணி வெறும் காணியாக காணப்பட்டுள்ளது.
உரிமையாளர் இங்கு இல்லாத நிலையில் அருகில் இராணுவ முகாம்கள் காணப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
குறித்த காணியில் இரு இடங்களில் தோண்டப்பட்டுள்ளன.
இவ்வாறு தோண்டப்பட்ட போது இராணுவத்தினரின் கண்ணில் பட்டுள்ளதை தொடர்ந்து இராணுவத்தினர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலீஸ் குழு இராணுவத்தினரின் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்டு புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைதுசெய்துள்ளார்கள்.
இதன்போது கொக்குளாய் பகுதியினை சேர்ந்த தமிழர்கள் 3 பேரும் மற்றும் யாஎல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி, பகுதியினை பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்புடுத்தப்பட்டதாக கருப்பபடும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு உந்துருளிகள், கார் ஒன்று என்பன பொலீசாரால் மீட்கப்பபட்டுள்ளதுடன் சான்று பொருட்களையும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசல்தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.