டெல்லியில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
குஜராத் வெற்றிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்வரும் 9 சட்டமன்ற தேர்தல்கள், 2024 மக்களவை தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20 ஆம் தேதி முடிவடையும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் மோடி – ஜே.பி.நட்டா தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலின் மேலும் அதிக மெஜாரிட்டி பாஜகவுக்கு கிடைக்கும் எனவும், மீண்டும் மோடி நாட்டின் தலைமையை ஏற்பார் எனவும் தெரிவித்தார்.