உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டின் தொடக்கமாக முதலில் முனியாண்டி சாமி காளை படி அவிழ்க்கப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.
இதனை தொடர்ந்து காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
8வது சுற்று வரை 219 மாடுபிடி வீரர்கள் களம் கண்ட நிலையில், சில காளைகள் காளையர்களை தன் பக்கம் நெருங்கவிடாமல் களமாடின. சில காளைகள் தன்னை அடக்க முயன்ற காளையர்களை தூக்கிவீசிச் சென்றன.
உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் விழா மேடையில் இருந்து ஜல்லிகட்டு நிகழ்வை கண்டு ரசித்தனர். நிகழ்வை உதயநிதியோடு நடிகர் சூரியும் இணைந்து கண்டுகளித்தார்.