தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.
துணிவும் அதே தினத்தில் வெளியாகும் நிலையில் இரண்டு படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் போட்டிபோட்டுவருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளின் இணைய பக்கம் முடங்கியது.
வாரிசு திரைப்படம் அனைத்து அம்சங்களும் நிறைந்த குடும்ப படமாக உருவாகிவருகிறது. தங்கச்சி சென்டிமென்ட், அப்பா, அம்மா சென்டிமென்ட் என குடும்ப உறவுகளை மையப்படுத்திய ஆக்சன் படங்களில் நடித்துதான் மக்களின் மனங்களில் விஜய் இடம் பிடித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதம், விவசாயம் போன்ற பொது பிரச்னைகளை கையாளும் படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.
இதனால் விஜய் குடும்ப சென்டிமென்ட் படங்களில் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருந்தது.இந்த நிலையில் அந்த குறைகளைப் போக்கும் விதமாக தற்போது வாரிசு படத்தில் விஜய் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.
டிரெய்லர் வைத்துப்பார்க்கும்போது, சரத்குமார் – ஜெயசுதா தம்பதிக்கு 3 மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம் என இரண்டு மகன்கள் பொறுப்பாக பிசினஸை கவனிக்க, கடைசிப் பிள்ளையான விஜய் பொறுப்பற்று திரிகிறார். இதனால் சரத்குமாருக்கு அவர் மீது வருத்தம்.
இந்த நிலையில் குடும்ப தொழிலில் பிரகாஷ் ராஜ் மூலம் பிரச்னை வருகிறது. இதனையறிந்த விஜய் தலைமை பொறுப்பை ஏற்று, தனது குடும்ப தொழிலை சரிவிலிருந்து எப்படி மீட்கிறார் என்பது கதையாக இருக்கலாம்.கதை கிட்டத்தட்ட பழமையான கதையாக இருந்தாலும் வம்சி தனது ட்ரீட்மென்ட்டில் வித்தியாசம் காட்டுவார் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகாவுடன், சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷாம், சம்யுக்தா, பிரபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.