பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ஜனவரி 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் 34 திரையரங்குகளில் இந்த படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதனை அடுத்து, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கோரி, 34 திரையரங்குகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசில், “தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன் படி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து, இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.