நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு
அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அதிபர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் விரைவில் வழமைக்கு திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்த அதிபர், இந்த வருட இறுதிக்குள் நாட்டில் ஜனநாயகம் தளராமல் செயற்படும் சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துவிட்டு மக்கள் துன்பப்படுவதற்கு இடமளிக்கப்படப் போவதில்லை.
அதற்கான சகல தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.
நான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர். ஆனால் ஜனநாயகத்திற்கு முதலில் பொது அமைதி தேவை.
அதற்கு சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம். ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது.
ஜனநாயகத்திற்கு நிலையான பொருளாதாரம் அவசியம். சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார மீட்சி இல்லாத நாட்டில் அராஜகமே தவிர ஜனநாயகம் இல்லை.
நாட்டை அராஜக பாதைக்கு செல்ல ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்” – என்றார்.