தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் ஆரோவில்லில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதிகளின் படங்கள் வைரலாகி வருகின்றன.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் அலன் (வயது 28). இவரும் இங்கிலாந்தில் உள்ள லியோவும்(வயது 28) கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரி ஆரோவில் வந்த அவர்கள் இங்கேயே தங்கினர்.
அலன் ஆரோவில்லில் விவசாய பணி செய்து வருகிறார். அவரது காதலி லியோ ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீரா காதல் காரணமாகவும் தமிழர் பாரம்பரிய முறைகள் மற்றும் உடைகள் போன்றவற்றின் ஈர்ப்பு காரணமாகவும் அவர்கள் இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி இன்று காலை ஆரோவில்லில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி-சேலை அணிந்து மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த செயல் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மீது கொண்ட காதலால் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதிகளை அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.