அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சார்பில் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ் இலக்கியத்தில் உரிய தகுதி பெற்ற ஆசிரியர்கள், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை நடத்தலாம் என்றும், இல்லையெனில், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக படித்த பொறியியல்,தொழில்நுட்பம்,அறிவியல் மற்றும் மானுடவியல் பேராசிரியர்கள் தமிழ்ப் பாடத்தை நடத்தலாம் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்து.
கண்டனம் தெரிவித்திருந்த ராமதாஸ் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். எந்த பேராசிரியர் வேண்டுமானலும் தமிழ் பாடத்தை நடத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் கூறுவது தமிழை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இந்த அறிவுறுத்தலை உடனடியாக அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். ராமதாஸை போல வேறு சில அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இதன் தொடர்ச்சியாக, தனது இந்த அறிவுறுத்தலை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
வரவேற்கத்தக்கது;
இந்நிலையில், இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடத்தை கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது
மகிழ்ச்சி அளிக்கிறது பொறியியல் படிப்புகளில் தமிழ்ப் பாடத்தை தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதற்கு நான் கண்டனம் தெரிவித்திருந்தேன். தமிழ்ப் பாடத்திற்கு தனியாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். எனது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளிலும்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவது போதுமானதல்ல. அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை கற்பிக்க தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்திற்கான பாட வேளைகளை அதிகரிக்கவும், அடுத்த ஆண்டு முதல் இரண்டாம் ஆண்டின் இரு பருவங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.