சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு என்ற பெயரில் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள பதிவில் ;
பொங்கல் பண்டிகை 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க., கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆணையிட்டது. ஆனால், இந்தப் பொருட்கள் தரமற்றவை என்றும், 21 பொருட்கள் என்பதற்கு பதிலாக 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
அரசு பணம் விரயம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தாலும், தவறிழைத்த நிறுவனங்களுக்கு மீண்டும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் மக்கள் எந்த பலனையும் அடையவில்லை என்றும், பயனடைந்தவை தனியார் நிறுவனங்கள் தான் என்றும், 1,200 கோடி ரூபாய் அரசாங்கப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவித்தால் மட்டும் போதாது மக்களுக்கான திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது, அந்தத் திட்டங்கள் மக்களை முழுவதும் சென்றடைகிறதா, அதன் பலன் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், சென்ற ஆண்டு பொங்கல் திட்டத்தின் போது இந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றே மக்கள் கருதுகிறார்கள். அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வண்ணமும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களுக்குப் பதிலாக ரொக்கமாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. இதன்மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும்.
ரூ.3,000 தருக தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்