விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் – சூட் அல்லது டிப்- டாப்பான உடைகளை விஜய் அணிவது வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசைவெளியீட்டிற்கு எளிமையாக வந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “வாரிசு பட விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடைய அணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே? ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று குறிப்பிட்டுள்ள அவர், ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான் என்றும் கூறியுள்ளார். மேலும், முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.