இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம், கவுகாத்தியில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிந்த விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், ஷுப்மன் கில், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா என வலுவான பேட்டிங் வரிசையை இந்தியா கொண்டுள்ளது. பந்துவீச்சு தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. காயத்திலிருந்து மீண்டதால் அணியில் சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா-வுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. எனவே, உலகக் கோப்பைக்கான இடத்தை உறுதி செய்ய இந்திய வீரர்கள், ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் சவால் அளிக்க காத்திருக்கிறது. அத்துடன், உலகக் கோப்பை தொடர், இந்தியாவில் நடைபெறவுள்ளதால் தற்போது நடைபெறும் ஒரு நாள் தொடர், அந்த அணிக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே, இரு அணிகளும் சாதிக்க காத்திருக்கின்றன.