சென்னை: ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவ்வாறு ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், “ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய அரசியல் சாசனம் 158 (2)-வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகிக்க கூடாது என்பது விதி. எனவே, ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார். எனவே அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என கோரப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு, விசரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.