Saturday, April 27, 2024
Homeசினிமாநடிகர் விஷாலின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து …!!

நடிகர் விஷாலின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து …!!

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் Pan Indian  திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர்.

லாரி நிற்காமல் வருவதை பார்த்த தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். இதன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments